நடந்ததுபற்றிச் சூர்ப்பணகை கூறல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

3129. அற்று அவன் உரைத்தலோடும், அழுது
     இழி அருவிக் கண்ணள்,
எற்றிய வயிற்றள், பாரினிடை
     விழுந்து ஏங்குகின்றாள்,
'சுற்றமும் தொலைந்தது, ஐய!
     நொய்து' என, சுமந்து கையள்,
உற்றது தெரியும்வண்ணம்,
     ஒருவகை உரைக்கலுற்றாள்:

    அற்று அவன் உரைத்தலோடும் - அவ்வாறு (இராவணன்) கூறிய
மாத்திரத்தில்; அழுது இழி அருவிக் கண்ணள் - அழுவதால் வழியும்
அருவி போன்ற கண்ணீரை உடையவளாய் (சூர்ப்பணகை) ; எற்றிய
வயிற்றள் -
(கைகளால்) அடிக்கப்படும் வயிற்றை உடையவளாய்;
பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள் - நிலத்தின் மேல் விழுந்து புரண்டு
அழுகின்றவளாய்; 'ஐய - ஐயனே; சுற்றமும் நொய்து தொலைந்தது -
(காவல் நின்ற) உறவும் விரைவில் அழிந்து போனது; எனச் சுமந்த கையள்-
எனத் தலை மீது கையை வைத்தவாறு; உற்றது தெரியும் வண்ணம் -
(கரன் முதலியோருக்கு) நேர்ந்த அழிவின் வரலாறு விளங்கும்படியாக; ஒரு
வகை உரைக்கலுற்றாள் -
ஒருவாறு தொகுத்துக் கூறலாயினாள்.       63