3130.' "சொல்" என்று என் வாயில் கேட்டார்;
     தொடர்ந்து எழு சேனையோடும்
"கல்" என்ற ஒலியில் சென்றார்,
     கரன் முதல் காளை வீரர்;
எல் ஒன்று கமலச் செங் கண் இராமன்
     என்று இசைத்த ஏந்தல்
வில் ஒன்றில், கடிகை மூன்றில்,
     ஏறினர் விண்ணில்' என்றாள்.

    கரன் முதல் காளை வீரர் - கரன் முதலிய இளங்காளைகளான
வீரர்கள்; சொல் என்று என் வாயில் கேட்டார் - நேர்ந்தது சொல் என்று
என் வாய்மொழியைக் கேட்ட உடனே; தொடர்ந்து எழு சேனையோடும்-
இடைவிடாது வரும் படைகளோடும்; கல்லென்ற ஒலியில் சென்றார் -
கல்லென்ற பேரொலி முழங்கப் புறப்பட்டனர்; எல் ஒன்று கமலம் -
ஒளிக்கதிர் பட்டு விரிந்த தாமரை போலும்; செங்கண் இராமன் - சிவந்த
கண்களை உடைய இராமன்; என்று இசைத்த ஏந்தல் - எனப் பெயர்
பெற்ற தலைவனின்; வில் ஒன்றில் கடிகை மூன்றில் - புகழ் பெற்ற
வில்லால் மூன்றே நாழிகையில்; ஏறினர் விண்ணில் என்றாள் - இறந்து
விண்ணுலகடைந்தனர் எனக் கூறினாள்.

     இராமன் வில்லாற்றல் விளங்க, சென்றவர் மூன்றே நாழிகையில்
மடிந்தார் என விரைவு தோன்றக் கூறினாள். இந்த நிலையிலும் கூட
இராமன் அழகிலும் வீரத்திலும் சூர்ப்பணகை கொண்ட கவர்ச்சி தெளிவாக
விளங்குகிறது.                                                64