3131. தாருடைத் தானையோடும் தம்பியர்,
     தமியன் செய்த
போரிடை, மடிந்தார் என்ற உரை
     செவி புகாதமுன்னம்,
காரிடை உருமின், மாரி
     கனலொடு பிறக்குமாபோல்
நீரொடு நெருப்புக் கான்ற, நிரை
     நெடுங் கண்கள் எல்லாம்.

    தமியன் செய்த போரிடை - இராமன் ஒருவனாகவே செய்த
போரில்; தாருடைத் தானையோடும் தம்பியர் - மாலைகள் சூடிய
வீரர்களோடு கரன் முதலிய தம்பிமார்கள்; மடிந்தார் - மரணமுற்றார்;
என்ற உரை - என்னும் மொழி; செவி புகாத முன்னம் - தன் காதில்
விழு முன்னர்; காரிடை மாரி - மேகங்களில் பிறந்த மழை; உருமின்
கனலொடு -
இடி மின்னல் நெருப்புக்களோடு; பிறக்குமா போல் -
தோன்றினாற் போல; நிறை நெடுங் கண்கள் எல்லாம் - நிறைந்த பெரிய
கண்கள் எல்லாவற்றிலும்; நீரொடு நெருப்புக் கான்ற - கண்ணீரும் கனலும்
வீசின.

     சோகத்தால் கண்ணீரும், கோபத்தால் நெருப்பும் பிறந்தமைக்கு
மழையும் இடி மின்னல்களும் பிறந்த மேகத்தை உவமையாக்கினார்.     65