இராவணன் வினாவும் சூர்ப்பணகை விளக்கமும் 3132. | ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி, தீயிடை உகுத்த நெய்யின், சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய, 'நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல், நின்னை, இன்னே, வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய?' என்றான். |
ஆயிடை - அவ்வமயம்; எழுந்த சீற்றத்து - உண்டாகிய கோபத்தில்; அழுந்திய துன்பம் மாறி - அனுபவித்த துயரம் நீங்கி; தீயிடை உகுத்த நெய்யின் - நெருப்பிலே விழுந்த நெய்போல; சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய - (துயரம் குறைந்த இடத்தில்) கோபம் வலிமை கொள்ள; (இராவணன் சூர்ப்பணகையிடம்); அவர் வலிந்து - இராம இலக்குவர் பலம் கொண்டு; நின்னை இன்னே - உன்னை இவ்வாறு; வாயிடை இதழும் மூக்கும் கொய்ய - காதின் மடலும் மூக்கும் அரிய; நீ இடை இழைத்த குற்றம் - நீ அவர்கள்பாற் செய்த தவறு; என்னைகொல் - யாதேனும் உண்டோ; என்றான் - என்று கேட்டான். ஊற்றம் - ஊன்று கோல். ஓசை உட்புகும் வழியாதலால் செவியை வாய் என்றும் செவிமடலை இதழ் என்றும் மொழிந்தார். 66 |