பிராட்டியின் அழகினை சூர்ப்பணகை விரித்துக் கூறுதல் 3134. | 'ஆர் அவள்?' என்னலோடும், அரக்கியும், 'ஐய! ஆழித் தேர், அவள் அல்குல்; கொங்கை, செம் பொன் செய் குலிகச் செப்பு; பார் அவள் பாதம் தீண்டப் பாக்கியம் படைத்தது அம்மா! பேர் அவள், சீதை' என்று வடிவு எலாம் பேசலுற்றாள் : |
(அது கேட்டு ஆர்வமுற்ற இராவணன்) ஆர் அவள் என்ன லோடும் - அந்தப் பெண் யார் என்று கேட்டவுடன்; அரக்கியும் - சூர்ப்பணகையும்; ஐய - ஐயனே; அவள் அல்குல் ஆழித்தேர் - அவளுடைய அல்குல் சக்கரம் பூட்டிய தேர் போலும்; கொங்கை செம் பொன் செய் குலிகச் செப்பு - அவளுடைய மார்பகங்கள் தங்கத்தால் செய்யப்பட்ட குங்குலியச் செப்புப் போலும்; அவள் பாதம் தீண்டப் பார் பாக்கியம் படைத்தது - அவள் திருவடி பட பூமி புண்ணியம் செய்தது போலும்; அம்மா - வியப்பு இது; அவள் பேர் சீதை - அவள் பெயரோ சீதையாம்; என்று வடிவெலாம் பேசலுற்றாள் - எனச் சீதையின் அழகு நலங்களை உரைக்கத் தொடங்கினாள். இராவணன் ஆசைத் தீயை வளர்க்க நெய் சொரிந்தாற் போல் இவ்வங்க வருணனைகள் அமைந்துள்ளன. 68 |