3135.'காமரம் முரலும் பாடல், கள், எனக்
     கனிந்த இன் சொல்;
தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும்
     அணங்கு ஆம்" என்னத்
தாமரை இருந்த தையல், சேடி
     ஆம் தரமும் அல்லள்;
யாம் உரை வழங்கும் என்பது
     ஏழைமைப்பாலது அன்றோ?

    (அவளுடைய) கள் எனக் கனிந்த இன்சொல் - மதுவைப் போல்
மயக்கமூட்டும் இனிய மொழிகள்; காமரம் முரலும் பாடல் - காமரம்
என்னும் பண்ணிசை கமழும் பாடலை ஒக்கும்; தேமலர் நிறைந்த கூந்தல்-
இனிய மலர்கள் சூடப் பெற்ற கூந்தலை உடைய (அவள்); தேவர்க்கும்
அணங்கு ஆம் -
தேவமாதரும் போற்றும் அழகுமிக்கவளாம்; என்ன -
என்று சொல்லும்படி; தாமரை இருந்த தையல் - தாமரை மலரில் வசிக்கும்
திருமகளும்; சேடி ஆம் தரமும் அல்லள் - தோழியாதற்குக் கூடத் தகுதி
அற்றவள்; யாம் உரை வழங்கும் என்பது - அவளுடைய அழகைக்
குறித்து நான் எடுத்துச் சொல்லக் கருதுவது; ஏழைமைப் பாலது அன்றோ?-
அறியாமையின் பாற்பட்டது ஆகும் அன்றோ?

     மானுடப் பெண்களினும் தேவமாதர் அழகுடையார். தேவமாதர்க்கும்
தலைவியாய், திருமகள் தாதியாம் தரமும் பெறாமற் போமளவு சிறந்த
எழிலுடையாள் சீதை எனக் கூறுகின்றாள்.                          69