3137. | ' "ஈசனார் கண்ணின் வெந்தான்" என்னும் ஈது இழுதைச் சொல்; இவ் வாசம் நாறு ஓதியாளைக் கண்டனன், வவ்வல் ஆற்றான், பேசல் ஆம் தகைமைத்து அல்லாப் பெரும் பிணி பிணிப்ப, நீண்ட ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன், அவ் உருவம் அம்மா! |
அனங்கன் - உருவிலியாகிய மன்மதன்; ஈசனார் கண்ணின் வெந்தான் - சிவபிரான் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்பது; என்னும் ஈது இழுதைச் சொல்- என்று சொல்லப்படும் இச் செய்தி பொய்ச் செய்தியாகும்; (உண்மை யாதெனில்); இவ் வாசம் நாறு ஓதியானை - இந்த மணம் கமழும் கூந்தலுடைய சீதையை; கண்டனன் - கண்டு (மோகமுற்று) ; வவ்வல் ஆற்றான் - கவர்ந்து செல்ல இயலாதவனாகி; பேசல் ஆம் தகைமைத்து அல்லா - வெளியே சொல்லவும் முடியாத; பெரும் பிணி பிணிப்ப - காமப் பெரு நோய் பற்றிக் கொள்ள; நீண்ட ஆசையால் - மிகுதியான ஆசையினாலே; அவ் வுருவம் அழிந்து தேய்ந்தான் - அழகிய மேனி மெலிவுற்று அழிந்தான்; அம்மா - வியப்பு! உண்மையாக மன்மதன் உருவிலியான காரணம் ஒன்றாக இருக்க மற்றொன்றைக் காரணமாக்குதல் ஒழிப்பு அணி. சீதையைக் கவரும் ஆற்றல் மன்மதனுக்கு இல்லை என்று சொல்லி, அதனைச் செய்யுமாறு இராவணனை மறைமுகமாகத் தூண்டுகிறாள். 71 |