3139. | 'தோளையே சொல்லுகேனோ? சுடர் முகத்து உலவுகின்ற வாளையே சொல்லுகேனோ? அல்லவை வழுத்துகேனோ? மீளவும் திகைப்பதல்லால், தனித்தனி விளம்பல் ஆற்றேன்; நாளையே காண்டி அன்றே? நான் உனக்கு உரைப்பது என்னோ? |
தோளையே சொல்லுகேனோ? - (அவளுடைய) தோளின் அழகை எடுத்துக் கூறுவேனோ?; சுடர் முகத்து உலவுகின்ற வாளையே சொல்லுகேனோ? - ஒளி வீசும் முகத்தில் திரிகின்ற வாளை மீன் போன்ற கண்ணழகை எடுத்துக் கூறுவேனோ?; அல்லவை வழுத்துகேனோ? - அல்லாது பிற உறுப்புக்களை எடுத்துக் கூறுவேனோ?; மீளவும் திகைப்பது அல்லால் - மறுபடியும் திகைத்துப் போகின்றேனே அன்றி; தனித் தனி விளம்பல் ஆற்றேன் - ஒவ்வோர் உறுப்பழகையும் தனியே வருணிக்க வலிமை இல்லேன்; நான் உனக்கு உரைப்பது என்னோ? - நான் உனக்கு விவரித்துச் சொல்ல வேண்டுவது யாதுமில்லை; நாளையே காண்டி அன்றே - நாளைக்கு நீயே காணப் போகின்றாய் அல்லவா? இவ்வாறு கூறுவதன் மூலம் சீதையைக் காணும் ஆவலை இராவணன் உள்ளத்தே மூட்டுகின்றாள். 73 |