3140.'வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல்
     ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும்,
     பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;
     சொல்லல் ஆம் உவமை உண்டோ?
"நெல் ஒக்கும் புல்" என்றாலும்,
     நேர் உரைத்து ஆகவற்றோ!

    வில் ஒக்கும் நுதல் என்றாலும் - வில்லைப் போல் நெற்றி
அமைந்திருக்கிறது என்று சொன்னாலும்; விழி வேல் ஒக்கும் என்றாலும்-
கண்கள் வேல் போல் விளங்குகின்றன என்று சொன்னாலும்; பல் முத்து
ஒக்கும் என்றாலும் -
பற்கள் முத்துக்கள் போன்றிருக்கும் என்று
சொன்னாலும்; பவளத்தை இதழ் என்றாலும் - பவளமே இவள் இதழ்கள்
என்று சொன்னாலும்; சொல் ஒக்கும் - உவமிக்கப்படும் சொல் பொருத்தம்
ஆகலாம்; (அல்லாது); பொருள் ஒவ்வாதால் - (சீதையின் உறுப்பழகை
உணர்த்தும் முழுமையான) பொருளால் பொருந்தாது; சொல்லல் ஆம்
உவமை உண்டோ -
(எனவே) சொல்லத்தக்க உவமை வேறு ஏதேனும்
உளதாகுமோ? (இல்லை) ; புல் ஒக்கும் நெல் - புல்லைப் போன்றிருக்கும்
நெல்; என்றாலும் - என்று கூறினாலும்; நேர் உரைத்தாக அற்றோ? -
பொருத்தமாக கூறியதாகக் கருத முடியுமா? (பொருந்தாது).

     வருணனைக்கு அப்பாற்பட்ட பொலிவும் அழகும் சீதைபால்
பொருந்தியுள்ளன எனவும், அதனால் நீயே நேரிற் காண்பதே பொருத்தம்
எனவும் சூர்ப்பணகை உணர்த்துகின்றாள்.                    74