3144. | 'தேர் தந்த அல்குல் சீதை, தேவர்தம் உலகின், இம்பர், வார் தந்த கொங்கையார்தம் வயிறு தந்தாளும் அல்லள்; தார் தந்த கமலத்தாளை, தருக்கினர் கடைய, சங்க நீர் தந்தது; அதனை வெல்வான் நிலம் தந்து நிமிர்ந்தது அன்றே. |
தேர் தந்த அல்குல் சீதை - தேர் போன்ற அல்குலை உடைய சீதை; தேவர் தம் உலகின் - அமரர் உலகத்திலும்; இம்பர் - இந்த மண்ணுலகத்திலும் இருக்கும்; வார் தந்த கொங்கை யார் தம் - கச் சணிந்த மார்பினை உடைய பெண்களின்; வயிறு தந்தாளும் அல்லள் - வயிற்றில் பிறந்தவளும் அல்லள்; (வேறு எவ்வாறு பிறந்தாள் எனில்); சங்க நீர் - சங்குகளை உடைய திருப்பாற்கடல்; தருக்கினர் கடைய - செருக்கு மிக்க தேவர்களும் அசுரர்களும் (தன்னைக்) கடைந்த போது; தார் தந்த கமலத்தாளை - மலர்ந்த தாமரையில் வாழ்கின்ற திருமகளை; தந்தது - அளித்தது; அதனை வெல்வான் - அக்கடலின் இக்கொடையை வெல்லும் பொருட்டு; நிலம் - பூமியானது; தந்து நிமிர்ந்தது - சீதையை அளித்துப் பெருமையால் உயர்ந்தது. (அன்றே - ஈற்றசை). திருப்பாற் கடல் திருமகளைத் தந்த சிறப்பை வெல்வதற்காகப் பூமி சீதையை அளித்தது என்பது கருத்து. இது தற்குறிப்பேற்ற அணி. சங்க நீர் - சங்கு போல் வெளுத்த பாற்கடல் என்றும் கூறலாம். தந்த என்ற சொல் முதல் அடியில் உவமை உருபாகவும், இரண்டாம் அடியில் அணிந்த என்ற பொருளிலும், மூன்றாவது அடியில் பூத்த என்ற பொருளிலும் வருகின்றது. 78 |