3145.'மீன் கொண்டு ஊடாடும் வேலை
     மேகலை உலகம் ஏத்த,
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல்,
     சிற்றிடை, சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ; உன்
     வாள் வலி உலகம் காண,
யான் கொண்டு ஊடாடும்வண்ணம்,
     இராமனைத் தருதி என்பால்.

    மீன்கொண்டு ஊடாடும் வேலை - மீன்களைத் தன்னகத்தே
கொண்டு அசையும் கடலினை; மேகலை - மேகலை அணியாகப்
பெற்றிருக்கும்; உலகம் - உலக மக்கள்; ஏத்த - புகழும் வண்ணம்; தேன்
கொண்டு ஊடாடும் கூந்தல் -
வண்டுகள் மணம் நாடித் தேடி வந்து
ஆடும் கூந்தலையும்; சிற்றிடை - சிறிய இடையையும் உடைய; சீதை
என்னும் மான் -
சீதையென்னும் மான் போன்றவளை; நீ கொண்டு
ஊடாடு -
நீ மனைவியாகக் கொண்டு அவளோடு மகிழ்ந்திருப்பாயாக; உன்
வாள் வலி உலகம் காண -
உன்னுடைய வாளாற்றலை உலகம் கண்டு
வியக்கும்படியாக; யான் கொண்டு ஊடாடும் வண்ணம் - நான்
துணைவனாகக் கொண்டு மகிழ்ந்திருக்குமாறு; இராமனை என்பால் தருதி -
இராமனை எனக்குக் கொடுப்பாயாக.

     உன் வலிமையால் இராமனையும் சீதையையும் கைப்பற்றி அவனை
எனக்குத் தந்து, அவளை நீ எடுத்துக்கொள் எனத் தன் காம நோக்கை
வெட்கமின்றிக் கூறினாள்.                                      79