3146. | 'தருவது விதியே என்றால், தவம் பெரிது உடையரேனும், வருவது வருநாள் அன்றி, வந்து கைகூட வற்றோ? ஒருபது முகமும், கண்ணும், உருவமும், மார்பும், தோள்கள் இருபதும், படைத்த செல்வம் எய்துதி இனி, நீ, எந்தாய்! |
எந்தாய் - என் ஐயனே; தருவது - உரிய காலத்தில் எதனையும் தருவது; விதியே - ஊழ்வினையே ஆகும்; என்றால் - அவ்வாறாயின்; தவம் பெரிது உடையரேனும் - பெரிய தவ வலிமை பெற்றவர்களாயினும்; வருவது - வர வேண்டும் நலங்கள்; வருநாள் அன்றி வந்து கைகூட வற்றோ - உரிய காலம் வரு முன் வந்து கையிற் சேர முடியுமோ? (முடியாது); ஒருபது முகமும் - பத்து முகங்களும்; இருபது கண்ணும் தோள்கள் - இருபது கண்களும் இருபது தோள்களும்; மார்பும் உருவமும்- வீர மார்பும் பொலிவு மிக்க உருவமும்; படைத்த - நீ வரத்தால் பெற்றதனுடைய; செல்வம் - (உண்மையான) சிறப்பை; இனி நீ எய்துதி - (சீதையைப் பெறுவதால்) இனிமேல் தான் நீ அடைய இருக்கின்றாய். எல்லையற்ற அழகுடைய சீதையின் நலம் நுகரப் போதாதென்றே பத்து முகம், இருபது கண்கள். இருபது தோள்கள் உற்றாய் என்று உயர்த்திக் கூறினாள். 80 |