3147.'அன்னவள்தன்னை நின்பால்
     உய்ப்பல் என்று எடுக்கலுற்ற
என்னை, அவ் இராமன் தம்பி
     இடைப் புகுந்து, இலங்கு வாளால்
முன்னை மூக்கு அரிந்து விட்டான்; முடிந்தது
     என் வாழ்வும்; உன்னின்
சொன்னபின், உயிரை நீப்பான் துணிந்தனென்'
     என்னச் சொன்னாள்.

    அன்னவள் தன்னை - அத்தகு தன்மையுடைய சீதையை; நின் பால்
உய்ப்பல் என்று -
உன்னிடம் கொண்டு சேர்ப்பேன் என்று; எடுக்கலுற்ற
என்னை -
எடுத்துவர முற்பட்ட என்னை; அவ்விராமன் தம்பி - அந்த
இராமனுடைய தம்பியான இலக்குவன்; இடைப் புகுந்து - குறுக்கே
நுழைந்து; இலங்கு வாளால் - ஒளிவீசும் தன் வாளால்; முன்னை -
முதலில்; மூக்கு அரிந்து விட்டான் - (என்) மூக்கினை அறுத்து விட்டான்;
என் வாழ்வும் முடிந்தது - (அப்போதே) என் வாழ்க்கையும் முற்றுப்
பெற்றது; உன்னின் சொன்ன பின் - (ஆயினும்) உன்னிடம்
நிகழ்ந்தவற்றைச் சொன்ன பிறகு; உயிரை நீப்பான் துணிந்தனென் - என்
உயிரை விட்டு விடலாம் என முடிவு செய்தேன்; என்னச் சொன்னாள் -
என்று (சூர்ப்பணகை) கூறினாள்.                                  81