இராவணன் காம வெறியன் ஆதல் 3148. | கோபமும், மறனும், மானக் கொதிப்பும், என்று இனைய எல்லாம், பாபம் நின்ற இடத்து நில்லாப் பெற்றிபோல், பற்று விட்ட; தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின், புக்க தாபமும் காமநோயும் ஆர் உயிர் கலந்த அன்றே. |
பாபம் நின்ற இடத்து - பாவம் நிலைபெற்ற இடத்தில்; நில்லாப் பெற்றி போல் - நிற்கமாட்டாத பெருமைகளைப் போல; கோபமும் மறனும் மானக் கொதிப்பும் - சினமும், வீரமும், மானத்தால் விளையும் மனக் கொதிப்பும்; என்று இனைய எல்லாம் - என்னும் இப் பண்புகள் எல்லாம்; பற்று விட்ட - (இராவணனின் காமம் காரணமாக) தொடர்பு விட்டு நீங்கின; தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் - ஒரு விளக்கு மற்றொரு விளக்கை அடைந்ததென்று சொல்லத்தக்க வண்ணம்; புக்க - உள்ளத்தில் நுழைந்த; காம நோயும் தாபமும் - காம நோயும் அதனால் விளைந்த தவிப்பும்; ஆர் உயிர் கலந்த அன்றே - (இராவணனின்) அரிய உயிரில் அப்போதே கலக்கலாயின. தங்கைக்கு விளைவிக்கப்பட்ட துன்பம் கருதி எழுந்த சினம், வீரம், கொதிப்பு என்பனவெல்லாம் காமத்தால் வெற்றி கொள்ளப்பட்டன. 82 |