3149. | கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான் உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப் பெற்ற வரனையும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்திலாதான். |
கேட்ட மங்கையை மறந்திலாதான் - (சூர்ப்பணகை வாயிலாகக்) கேள்விப்பட்ட சீதையென்னும் பெண்ணை மட்டும் மறவாமலிருக்கும் இராவணன்; அரனையும் வெற்றி கொண்ட காமன் அம்பினால் - சிவபெருமானையும் வெற்றி கொண்டதாகிய மன்மதனின் மலரம்பினால் (காம வயப்பட்டு); கரனையும் மறந்தான் - (தன் வட திசைக் காவற்படைத் தலைவனாகிய) கரன் மாண்டு போனதையும் மறந்து போனான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான் - தன் தங்கையாகிய சூர்ப்பணகையின் மூக்கை அறுத்து எறிந்தவன்; உரனையும் மறந்தான் - வலிமையையும் மறந்து போனான்; உற்ற பழியையும் மறந்தான் - (அதனால் தனக்கு) நேர்ந்த பழியையும் மறந்து போனான்; முன்னைப் பெற்ற வரனையும் மறந்தான் - முன்பு (தான் தவம் செய்து) பெற்ற வரங்களின் ஆற்றலையும் மறந்து போனான். காமத்தால் அனைத்தையும் மறந்தவன் சீதையை மட்டும்மறக்கவில்லை என்று காட்டினார். காமன் அம்புகள் - தாமரை, மா,அசோகு, நீலோற்பலம், முல்லை என்னும் மலர்கள். 83 |