3150.சிற்றிடைச் சீதை என்னும்
     நாமமும் சிந்தைதானும்
உற்று, இரண்டு ஒன்று ஆய் நின்றால், ஒன்று
     ஒழித்து ஒன்றை உன்ன
மற்றொரு மனமும் உண்டோ? மறக்கல்
     ஆம் வழி மற்று யாதோ?
கற்றவர் ஞானம் இன்றேல்,
     காமத்தைக் கடத்தல் ஆமோ?

    சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் - மெல்லிய இடையை உடைய
சீதை என்னும் பெயரும்; சிந்தை தானும் - இராவணன் மனமும்; உற்ற -
நெருங்கி; இரண்டு ஒன்றாய் நின்றால் - இரண்டு என்ற நிலை கடந்து
ஒன்றாகப் பொருந்திப் போய்விட்டால்; ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன -
சீதை என்ற ஒன்றின் பெயரை நீக்கி மற்றொரு பொருளை எண்ணுதற்கு;
மற்றொரு மனமும் உண்டோ - இன்னொரு மனமும் இருக்கின்றதோ?
(இல்லை); (எனவே); மறக்கல் ஆம் வழி மற்று யாதோ - சீதையை
மறப்பதற்குப் பொருந்திய வழி வேறு யாது உள்ளது? (எதுவும் இல்லை) ;
கற்றவர் - கல்வி வல்லவராயினும்; ஞானம் - நன்மை தீமை பற்றிய
உயரறிவு; இன்றேல் - இல்லையெனில்; காமத்தைக் கடத்தல் ஆமோ? -
(
பொருந்தாக்) காமத்தை வெல்லுதல் இயலுமோ? (இயலாது).

     'சிற்றிடைச் சீதை' என்று முன்னர்ச் (3145) சூர்ப்பணகை அறிமுகம்
செய்ததை இராவணன் மறந்திலன் என்பது தோன்றக் கூறுகின்றார்.      84