3151. | மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம், நீண்ட எயிலுடை இலங்கை நாதன், இதயம் ஆம் சிறையில் வைத்தான்; அயிலுடை அரக்கன் உள்ளம், அவ் வழி, மெல்ல மெல்ல, வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய்போல், வெதும்பிற்று அன்றே. |
மயிலுடைச் சாயலாளை - மயிலின் (இயற்கையான) சாயல் படைத்தவளை; வஞ்சியா முன்னம் - வஞ்சனையால் கவர்வதன் முன்னரே; நீண்ட எயிலுடை இலங்கை நாதன் - உயர்ந்தோங்கிய கோட்டை மதில்களை உடைய இலங்கையின் தலைவன்; இதயமாம் சிறையில் வைத்தான் - (தன்) மனமாகிய சிறைச்சாலையின் உள்ளே வைத்தான்; (அதன் விளைவாக); அயிலுடை அரக்கன் உள்ளம் - வேற்படை கொண்ட இராவணனாகிய இராக்கதன் மனம்; அவ்வழி - அவ்வகையில்; வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய் போல் - வெயிற் பொழுதில் வைக்கப்பட்ட வெண்ணெய் போன்று; மெல்ல மெல்ல வெதும்பிற்று - சிறிது சிறிதாக வெப்பத்தால் உருகலாயிற்று. (அன்றே - ஈற்றசை). அசோக வனத்துச் சிறைக்கு முன்பே மனச்சிறையில் வைத்தான் என நயம்பட உரைத்தார். 85 |