3152.விதியது வலியினாலும், மேல்
     உள விளைவினாலும்,
பதி உறு கேடு வந்து
     குறுகிய பயத்தினாலும்,
கதி உறு பொறியின் வெய்ய காம
     நோய், கல்வி நோக்கா
மதியிலி மறையச் செய்த தீமைபோல்,
     வளர்ந்தது அன்றே.

    விதியது வலியினாலும் - ஊழ்வினையின் ஆற்றலினாலும்; மேல்
உள விளைவினாலும் -
இனிமேல் அதனால் உண்டாக இருக்கிற
பயன்களாலும்; பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும் - இலங்கை
மா நகருக்கு அழிவுக்குரிய நிலை ஏற்பட்டு நெருங்கியுள்ள பலன்களாலும்;
கதி உறு பொறியின் - விரைவாய் உற்று பொறிகளின் வழியே; வெய்ய
காம நோய் -
(இராவணனைப் பற்றிய) கொடிய காம நோயானது; கல்வி
நோக்கா மதியிலி -
கல்வி அறிவு அற்ற அறிவிலி ஒருவன்; மறையச்
செய்த தீமை போல் -
யாருமறியாமல் மறைவாகச் செய்த கெடுதி போல;
வளர்ந்தது - ஓங்கிப் பெருகியது; அன்றே - அசை.

     வேதவதி சாபம், வானரங்களால் இலங்கை அழிய வேண்டுமென நந்தி
இட்ட சாபம் முதலியனவெல்லாம் நிறைவேறத் தக்க காலம் நெருங்கியது.
ஞானமற்றவன் மறைவாகச் செய்த தீங்கும் விரைவாக வெளிப்படும் என்பது
தோன்றக் கூறினார்.                                            86