| 3152. | விதியது வலியினாலும், மேல் உள விளைவினாலும், பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும், கதி உறு பொறியின் வெய்ய காம நோய், கல்வி நோக்கா மதியிலி மறையச் செய்த தீமைபோல், வளர்ந்தது அன்றே. |
விதியது வலியினாலும் - ஊழ்வினையின் ஆற்றலினாலும்; மேல் உள விளைவினாலும் - இனிமேல் அதனால் உண்டாக இருக்கிற பயன்களாலும்; பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும் - இலங்கை மா நகருக்கு அழிவுக்குரிய நிலை ஏற்பட்டு நெருங்கியுள்ள பலன்களாலும்; கதி உறு பொறியின் - விரைவாய் உற்று பொறிகளின் வழியே; வெய்ய காம நோய் - (இராவணனைப் பற்றிய) கொடிய காம நோயானது; கல்வி நோக்கா மதியிலி - கல்வி அறிவு அற்ற அறிவிலி ஒருவன்; மறையச் செய்த தீமை போல் - யாருமறியாமல் மறைவாகச் செய்த கெடுதி போல; வளர்ந்தது - ஓங்கிப் பெருகியது; அன்றே - அசை. வேதவதி சாபம், வானரங்களால் இலங்கை அழிய வேண்டுமென நந்தி இட்ட சாபம் முதலியனவெல்லாம் நிறைவேறத் தக்க காலம் நெருங்கியது. ஞானமற்றவன் மறைவாகச் செய்த தீங்கும் விரைவாக வெளிப்படும் என்பது தோன்றக் கூறினார். 86 |