3153. | பொன் மயம் ஆன நங்கை மனம் புக, புன்மை பூண்ட தன்மையோ-அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ- மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்? வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே? |
பொன்மயமான நங்கை - (அழகு மிகுதியினால்) பொன்னின் ஒளி சூழும் எழிலுடைய சீதை; மனம் புக - மனத்தில் புகுந்துவிட்டதனால்; புன்மை பூண்ட தன்மையோ - (இராவணன்) இழிவடைந்து விட்டானோ? (அல்லது); அரக்கன் - அவ்விராவணன்; தன்னை அயர்த்ததோர் தகைமையாலோ - தனக்குத் தானே மறந்துவிட்டதாகிய தன்மையினாலோ; மன்மதன் வாளி தூவி - மன்மதன் அம்புகள் ஏவி; நலிவது ஓர் வலத்தன் ஆனான் - (இராவணனுக்கு) வருத்தம் தரும் வல்லமையுடையவன் ஆனான்; வன்மையை மாற்றும் ஆற்றல் - ஒருவனுடைய வீரத்தை அழிக்கும் திறமை; காமத்தே வதிந்தது அன்றே - காமத்தின் பால் பொருந்திற்று அன்றோ? வீராதி வீரனையும் வீழ்த்த எளிய மலரம்புகளே காரணமாயின என உணர்த்தினார். 87 |