3154. | எழுந்தனன் இருக்கைநின்று; ஆண்டு, ஏழ் உலகத்துளோரும் மொழிந்தனர் ஆசி; ஓசை முழங்கின, சங்கம் எங்கும்; பொழிந்தன பூவின் மாரி; போயினர் புறத்தோர் எல்லாம்; அழிந்து ஒழி சிந்தையோடும் ஆடகக் கோயில் புக்கான். |
இருக்கை நின்று எழுந்தனன் - (இராவணன்) தான் வீற்றிருந்த அரியாசனத்தினின்றும் எழுந்தான்; ஆண்டு - அப்பொழுது; ஏழ் உலகத்துளோரும் - ஏழு உலகங்களிலும் இருப்பவர்களும்; ஆசி மொழிந்தனர் - வாழ்த்துக்களைக் கூறினார்கள்; எங்கும் சங்கம் ஓசை முழங்கின - எவ்விடத்தும் சங்குகள் ஒலி முழக்கம் செய்தன; பூவின் மாரி பொழிந்தன - மலர் மழை பொழியலாயிற்று; புறத்தோர் எல்லாம் போயினர் - அருகிருந்த பிறர் எல்லாம் அகன்று சென்றனர்; அழிந்து ஒழி சிந்தையோடும் - (இராவணனும்) சிதைந்து குலைகிற மனத்தோடு; ஆடகக் கோயில் புக்கான் - பொன் மாளிகையான (தன்) அரண்மனைக்கு சென்றான். ஆடகம் - நால் வகைப் பொன்னில் ஒருவகை. சாதரூபம், கிளிச் சிறை, சாம்புநதம் என்பன பிற. 88 |