இராவணன் காம நோய் மேலும் முதிர்தல் 3155. | பூவினால் வேய்ந்து செய்த பொங்கு பேர் அமளிப் பாங்கர், தேவிமார் குழுவும் நீங்கச் சேர்ந்தனன்; சேர்தலோடும், நாவி நாறு ஓதி நவ்வி நயனமும், குயமும், புக்குப் பாவியா, கொடுத்த வெம்மை பயப்பயப் பரந்தது அன்றே. |
(அரண்மனையுட் புகுந்த இராவணன்); தேவிமார் குழுவும் நீங்க - (தன்) மனைவியர் கூட்டத்திலிருந்து விலகியவனாய்; பூவினால் வேய்ந்து செய்த - மலர்கள் பரப்பி அமைக்கப்பட்ட; பொங்கு பேர் அமளிப் பாங்கர் சேர்ந்தனன் - உயர்ந்த பெரிய படுக்கையிடத்தில் சேர்ந்தான்; சேர்தலோடும் - அவ்வாறு சேர்ந்த மாத்திரத்தில்; நாவி நாறு ஓதி நவ்வி - புனுகின் நறுமணம் வீசும் கூந்தலையுடைய மான் போன்ற சீதையினுடைய; நயனமும் - கண்களும்; குயமும் - மார்பும்; புக்குப் பாவியா - மனத்தினுள் பல்வகை நினைவுகளை ஊட்ட; கொடுத்த வெம்மை - (அப்பாவனைகள்) தந்த உணர்ச்சி வெப்பம்; பயப்பயப் பரந்தது - சிறிது சிறிதாக மிகுதிப்படலாயிற்று. (அன்றே - அசை). 89 |