3157. | தாது கொண்ட சீதம் மேவு சாந்து, சந்த மென் தளிர், போது, கொண்டு அடுத்தபோது, பொங்கு தீ மருந்தினால் வேது கொண்டதென்ன, மேனி வெந்து வெந்து, விம்மு தீ ஊது வன் துருத்திபோல், உயிர்த்து உயிர்த்து, உயங்கினான். |
தாது கொண்ட போது - மகரந்தம் பொருந்திய மலர்களையும்; சீதம் மேவு சாந்து - குளிர்ச்சி உடைய சந்தனத்தையும்; சந்த மென்தளிர் - அழகிய மெல்லிய தளிர்களையும்; கொண்டு அடுத்தபோது - எடுத்துக் கொண்டு பணிப் பெண்கள் (இராவணனை) நெருங்கிய காலத்தில்; பொங்கு தீ மருந்தினால் வேது கொண்ட தென்ன - கொதிக்கும் நெருப்புச் சேர்ந்த மருந்தினால் வேது கொடுத்தாற் போல; மேனி வெந்து வெந்து - உடல் வெப்பத்தால் சூடுபட்டு; விம்மு தீ ஊது வன் துருத்தி போல் - பொங்கி எழும் நெருப்பை ஊதி வளர்க்கும் (கொல்லன்) துருத்தி போன்று; உயிர்த்து உயிர்த்து உயங்கினான் - பெருமூச்சு விட்ட வண்ணம் மயங்கிச் சோர்ந்தான். சில நோய்களுக்கு வெப்ப நெருப்பால் வேது கொடுத்தலை உவமையாக்கினார். 'செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் சந்தனம் என்று ஆரோ தடவினார்' என்ற நந்திக் கலம்பகச் செய்யுளை ஒப்பிடுக. வேது - குறிப்பு வினையாலணையும் பெயர். 91 |