3159. | பரம் கிடந்த மாதிரம்பரித்த, பாழி யானையின் கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன்- மரம் குடைந்த தும்பிபோல, அனங்கன் வாளி வந்து வந்து உரம் குடைந்து, நொந்து நொந்து, உளைந்து உளைந்து-ஒடுங்கினான். |
பரம் கிடந்த மாதிரம் பரித்த - பாரம் தாங்கும் திசைகளைச் சுமந்த; பாழி யானையின் - வலிமை மிக்க திக்கு யானைகளுடைய; கரம் கிடந்த கொம்பு ஒடிந்து - தும்பிக்கையோடு பொருந்திய கொம்புகள் முறிய; அடங்க வென்ற காவலன் - முழுவதாக வெற்றி கொண்ட இராவணன்; மரம் குடைந்த தும்பி போல் - மரத்தைக் குடைகிற வண்டு போல்; அனங்கன் வாளி வந்து வந்து - மன்மதனின் அம்பு தொடர்ந்து வந்து; உரம் குடைந்து - (தன்) மார்பை ஊடுருவ; நொந்து நொந்து - மிகவும் வருத்தமுற்று; உளைந்து உளைந்து - மிகவும் அயர்ச்சியுற்று; ஒடுங்கினான் - மெலிவுற்றான். வலிய திக்கு யானைகளையும் வெல்லும் திறமுடையோன்மென்மையான மலர்க் கணைகளுக்குத் தோற்றான் என முரண் காட்டிக்கூறினார். துன்ப மிகுதி காட்ட, வந்து வந்து, நொந்து நொந்து, உளைந்துஉளைந்து என அடுக்கி உரைத்தார். அடங்க - முற்றிலும்; 93 |