3160. | 'கொன்றை துன்று கோதையோடு ஓர் கொம்பு வந்து என் நெஞ்சிடை நின்றது, உண்டு கண்டது' என்று, அழிந்து அழுங்கும் நீர்மையான், மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல, மல்லிகைத் தென்றல் வந்து எதிர்ந்த போது, சீறுவானும் ஆயினான். |
'கொன்றை துன்று கோதையோடு - கொன்றைக் காயை ஒத்த கூந்தலுடனே; ஓர் கொம்பு வந்து - ஒரு பூங்கொம்பு போன்றாள் வந்து; என் நெஞ்சிடை நின்றது - எனது மனத்திற்குள் தங்கினாள்; கண்டது உண்டு - (அவளை) நான் பார்த்ததுண்டு'; என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் - என்று கருதி மனம் சிதைந்து வருந்தும் தன்மையனான இராவணன்; மன்றல் தங்கு அலங்கல் மாரன் - மணம் பொருந்திய மலர் மாலை சூடிய மன்மதன்; வாளி போல - எய்யும் கணை போன்ற; மல்லிகைத் தென்றல் வந்து - மல்லிகை மணம் சுமந்த தென்றல் காற்று வந்து; எதிர்ந்த போது- மேனியில் பட்டபோது; சீறுவானும் ஆயினான் - (அக்காற்றின் மீது) சினம் கொள்வானும் ஆனான். குளிர்ந்த தென்றலும் காமநோயை மிகுவித்தது என்று கூறினார். கொன்றைக் காய் குழலுக்கு உவமையாவதை 'கொன்றையம் பூங்குழலாள்' எனச் சிலப்பதிகாரமும் கூறும் (சிலம்பு : ஆய்ச்சியர் குரவை - கொளு 6) மன்மதன் மலர்க் கணை போலவே மல்லிகை மணம் சுமந்த தென்றலும் வருத்தியது; உவமை மிகு நயமானது. 94 |