இராவணன் ஒரு குளிர் சோலை அடைதல்

3161. அன்ன காலை, அங்குநின்று எழுந்து,
     அழுங்கு சிந்தையான்,
'இன்ன ஆறு செய்வென்' என்று, ஓர்
     எண் இலான், இரங்குவான்;
பன்னு கோடி தீப மாலை,
     பாலை யாழ் பழித்த சொல்
பொன்னனார், எடுக்க, அங்கு,
     ஓர் சோலையூடு போயினான்.

    அன்ன காலை - அப்பொழுது; அழுங்கு சிந்தையான் - நொந்த
மனத்தினனாகிய இராவணன்; அங்கு நின்று எழுந்து -
அவ்விடத்திலிருந்தும் செல்ல எழுந்து; 'இன்னவாறு செய்வென் - இம்
முறையில் நடந்து கொள்வேன்'; என்று ஓர் எண் இலான் - என்று
எண்ணும் சிந்தனை ஏதும் இல்லாதவனாய்; இரங்குவான் -
வருந்துகின்றவன்; பாலை யாழ் பழித்த சொல் பொன்னனார் - பாலை
யாழின் இன்னிசையை வென்ற அழகிய பேச்சுக்களை உடைய பொன்
மேனிப் பணிப் பெண்கள்; பன்னு கோடி தீப மாலை எடுக்க - பாராட்டி
உரைக்கத்தக்க எண்ணற்ற விளக்கு வரிசைகளை ஏந்த; அங்கு ஓர்
சோலையூடு போயினான் -
அங்குள்ள ஒரு சோலைக்குள் நுழைந்தான்.

     செய்தல் அறியானாய் இராவணன் சோலைக்குச் சென்றான். பாலை
யாழ் நால்வகைப் பண்களுள் ஒன்று குறிஞ்சி, மருதம், செவ்வழி என்பன
பிற.                                                        95