அறுசீர் ஆசிரிய விருத்தம்

3162.மாணிக்கம், பனசம்; வாழை
     மரகதம்; வயிரம், தேமா;
ஆணிப் பொன் வேங்கை;
     கோங்கம், அரவிந்தராகம்; பூகம்
சேண் உய்க்கும் நீலம்; சாலம்
     குருவிந்தம்; தெங்கு வெள்ளி;
பாணித் தண் பளிங்கு, நாகம்;
     பாடலம் பவளம் மன்னோ.

    (அச் சோலையில்); பனசம் மாணிக்கம் - பலா மரங்கள் மாணிக்க
மயமாகவும்; வாழை மரகதம் - வாழை மரங்கள் மரகத மயமாகவும்; தேமா
வயிரம் -
இனிய மாமரங்கள் வைர மயமாகவும்; வேங்கை ஆணிப்
பொன் -
வேங்கை மரங்கள் உயர்வகைப் பொன் மயமாகவும்; கோங்கம்
அரவிந்த ராகம் -
கோங்கு மரங்கள் பதும ராகம் என்னும் இரத்தின
மயமாகவும்; பூகம் சேண் உய்க்கும் நீலம் - கமுகு நெடுந்தொலைவு
ஒளிரும் நீலமணி மயமாகவும்; சாலம் குருவிந்தம் - ஆச்சா மரங்கள்
குருவிந்தம் என்னும் மணி மயமாகவும்; தெங்கு வெள்ளி - தென்னை
மரங்கள் வெள்ளி மயமாகவும்; நாகம் பாணித் தண் பளிங்கு - சுர
புன்னை மரங்கள் நீரோட்டம் மிக்க கண்ணாடி மயமாகவும்; பாடலம்
பவளம் -
பாதிரி மரங்கள் பவள மயமாகவும் (இருந்தன). (மன்னோ -
அசை)

     இராவணனின் சோலை மரங்கள் தங்கம், மணிகள் மயமானவை என்று
சுந்தரகாண்டச் செய்யுள் (4853) விளக்குகிறது. வினை முற்று வருவித்து
முடிக்கப்பட்டது.                                               96