3163.வான் உற நிவந்த செங் கேழ் மணி
     மரம் துவன்றி, வான
மீனொடு மலர்கள் தம்மின்
     வேற்றுமை தெரிதல் தேற்றா,
தேன் உகு, சோலைநாப் பண், செம்பொன்
     மண்டபத்துள், ஆங்கு ஓர்
பால் நிற அமளி சேர்ந்தான்; பையுள்
     உற்று உயங்கி நைவான்.

    வானுற நிவந்த செங் கேழ் - விண் தொடுமாறு உயர்ந்த அழகிய
ஒளியுடைய; மணி மரம் - இரத்தின மயமான மரங்கள்; துவன்றி -
நெருங்கி வளர்ந்து; வான மீனொடு மலர்கள் தம்மின் - விண்
மீன்களுக்கும் மரங்களின் மலர்களுக்கும் இடையே; வேற்றுமை தெரிதல்
தேற்றா -
வேறுபாடு தெரிய முடியாதபடி (அமைந்திருக்கும்); தேன் உகு
சோலை நாப்பண் -
தேன் சிந்தும் சோலையின் நடுவே; செம்பொன்
மண்டபத்துள் -
தங்கமயமான மண்டபத்தில்; ஆங்கு ஓர் - அங்கே
இடப்பட்ட ஒரு; பால் நிற அமளி சேரந்தான் - பால் போன்ற வெள்ளை
நிறப் படுக்கையினை அடைந்த (இராவணன்); பையுள் உற்று - துயரம்
வந்தடைய; உயங்கி நைவான் - நொந்து வருந்தினான்.

     முதல் இரண்டடியில் உவமை அணி அமைந்துள்ளது.          97