பறவைகள் ஒலி அடங்கலும், பருவங்கள் தடுமாறுதலும்

3164. கனிகளின், மலரின், வந்த கள்
     உண்டு களிகொள் அன்னம்,
வனிதையர் மழலை இன்சொல்
     கிள்ளையும், குயிலும், வண்டும்,
இனியன மிழற்றுகின்ற யாவையும்,
     'இலங்கை வேந்தன்
முனியும்' என்று அவிந்த வாய;
     மூங்கையர் போன்ற அன்றே.

    கனிகளின், மலரின் - பழங்களிலிருந்தும் பூக்களிலிருந்தும்; வந்த
கள் உண்டு -
பெருகிய மதுவை அருந்தி; களி கொள் அன்னம் - கள்
வெறி கொண்ட அன்னப் பறவைகளும்; வனிதையர் மழலை இன்சொல்
கிள்ளையும் -
மகளிர் போல் இனிய மழலை மொழி பேசும் கிளிகளும்;
குயிலும், வண்டும் - குயில்களும், தேன் வண்டுகளும்; இனியன
மிழற்றுகின்ற யாவையும் -
இனிதே பேசுதல் வல்ல வேறு பல
பறவைகளும்; 'இலங்கை வேந்தன் - இலங்கையர் கோனாகிய இராவணன்;
முனியும் என்று - கோபித்துக் கொள்வான்' என்று; அவிந்த வாய -
மௌனம் கொண்ட வாயினவாய்; மூங்கையர் போன்ற - ஊமைகளாகக்
காட்சி தந்தன; (அன்றே - ஈற்றசை)

     இராவணனுக்கு அஞ்சிப் பறவைகள் ஒலி அடங்கின. கிளிக் குரல்
போன்ற மழலை என்னும் மரபை மாற்றி மழலை ஒத்த கிளிச் சொல் என்றது
எதிர் நிலையுவமையணி.                                      98