3165. | பருவத்தால் வாடை தந்த பசும் பனி, அனங்கன் வாளி உருவிப் புக்கு ஒளித்த புண்ணில், குளித்தலும், உளைந்து விம்மி, 'இருதுத்தான் யாது அடா?' என்று இயம்பினன்; இயம்பலோடும், வெருவிப் போய், சிசிரம் நீங்கி, வேனில் வந்து இறுத்தது அன்றே. |
பருவத்தால் - (பின் பனிப்) பருவம் காரணமாக; வாடை தந்த பசும்பனி - வடதிசைக் காற்றுடன் கலந்து வந்த புதிய பனியானது; அனங்கன் வாளி - மன்மத பாணங்கள்; உருவிப் புக்கு ஒளித்த புண்ணில் - பாய்ந்து நுழைந்து ஓடி மறைந்ததால் விளைந்த புண்ணில்; குளித்தலும் - சென்று தைத்தலும்; உளைந்து விம்மி - வருந்திக் கலங்கி (இராவணன்); 'இருதுத் தான் யாது அடா என்று - இப்பொழுது நடப்பிலுள்ள பருவ காலம் தான் ஏதடா' என்று; இயம்பினன் - வினவினான்; இயம்பலோடும் - அவ்வாறு வினவியதும்; வெருவிப் போய் சிசிரம் நீங்கி - அச்சமுற்றுப் பின் பனியான அப்பருவம் நீங்கிச் செல்ல; வேனில் வந்து இறுத்தது - (தொடர்ந்து வரும்) வேனிலாகிய வசந்த காலம் வந்து சேர்ந்தது; (அன்றே - அசை) இராவணனுக்குப் பயந்து பின்பனி விலக வேனிற் பருவம் வந்து இசைந்தது. இயல்பின் இயங்கும் பருவ காலங்களும் அஞ்சித் தடுமாறும் வகையில் இலங்கையர் கோன் ஆட்சி அமைந்தது; உயர்வு நவிற்சிதான் எனினும் காவிய நிகழ்ச்சிக்குப் பொருத்தமானது. ருது என்னும் வடசொல் இருது என வந்தது. முதுவேனில், கார், கூதிர், முன்பனி என்பன பிற பருவங்கள். 99 |