3167. | மாதிரத்து இறுதிகாறும், தன் மனத்து எழுந்த மையல்- வேதனை வெப்பம் செய்ய, வேனிலும் வெதுப்பும் காலை, 'யாது இது இங்கு? இதனின் முன்னைச் சீதம் நன்று; இதனை நீக்கி, கூதிர்ஆம் பருவம் தன்னைக் கொணருதிர் விரைவின்' என்றான். |
தன் மனத்து எழுந்த மையல் - அவன் உள்ளத்தில் எழுந்த காமம்; மாதிரத்து இறுதிகாறும் - திசைகளின் எல்லைகளையும் தொட்டு; வேதனை வெப்பம் செய்ய - துன்பமாகிய வெம்மையைப் பரப்ப; வேனிலும் வெதுப்பும் காலை - வேனிற் காலமும் கொடிய வெப்பத்தை உண்டு பண்ண; அவன்; 'இங்கு இது யாது? - இங்கு துன்பம் தரும் இப்பருவம் யாது?; முன்னைச் சீதம் இதனின் நன்று - முன்பு வந்த குளிர்ச்சிப் பனிப்பருவம் இதனினும் நன்றாயிருந்தது; இதனை நீக்கி - இவ் வேனிற் பருவத்தை விலக்கி; கூதிராம் பருவம் தன்னை - கூதிராம் பருவகாலத்தை; விரைவின் கொணருதிர் - விரைந்து கொண்டு வாருங்கள்'; என்றான் - என்று பணியாளரிடம் கட்டளையிட்டான். வேனிற் காலம் தன் இயல்புக் கேற்பக் காம உணர்வை மிகுவிக்கக் கூதிர்ப் பருவத்தைக் கொணர இராவணன் ஆணையிட்டான். 101 |