3168. | கூதிர் வந்து அடைந்தகாலை, கொதித்தன குவவுத் திண்தோள்; 'சீதமும் சுடுமோ? முன்னைச் சிசிரமேகாண் இது' என்றான்; 'ஆதியாய்! அஞ்சும் அன்றே, அருள் அலது இயற்ற?' என்ன, 'யாதும், இங்கு, இருது ஆகாது; யாவையும் அகற்றும்' என்றான். |
கூதிர் வந்து அடைந்த காலை - குளிர் காலம் உடன் வந்து சேர்ந்த போது; குவவுத் திண் தோள் கொதித்தன - வலிமை வாய்ந்த திரண்ட (இராவணன்) தோள்கள் முன்னை விட வெப்பம் பூண்டன; (அப்போது அவன்); சீதமும் சுடுமோ? - கூதிர் காலத்துக் குளிர்ச்சியும் சுடுவது உண்டோ?; முன்னைச் சிசிரமே இது காண் - பழைய பனிக் காலம் தான் இது; என்றான் - எனக் கூறினான்; அதற்குப் பணியாளர்; 'ஆதியாய் - (எம்) தலைவனே; அருள் அலது இயற்ற அஞ்சும் அன்றே- தங்கள்பால் உத்தரவு இல்லாத ஒன்றைச் செய்ய எம்மனோர் அச்சம் கொள்வரே'; என்ன - என்று தெரிவிக்க; (அது கேட்ட இராவணன்); இங்கு இருது யாதும் ஆகாது - இனி இங்கு எவ்வகைப் பருவ காலமும் வருதல் கூடாது; யாவையும் அகற்றும் என்றான் - எல்லாப் பருவகாலங்களையும் நீக்கி விடுங்கள்' என ஆணையிட்டான். அனைத்துப் பருவகாலங்களையும் அகன்று போகுமாறு கட்டளையிட்டான் இராவணன். 102 |