3168. கூதிர் வந்து அடைந்தகாலை, கொதித்தன
     குவவுத் திண்தோள்;
'சீதமும் சுடுமோ? முன்னைச் சிசிரமேகாண்
     இது' என்றான்;
'ஆதியாய்! அஞ்சும் அன்றே, அருள்
     அலது இயற்ற?' என்ன,
'யாதும், இங்கு, இருது ஆகாது; யாவையும்
     அகற்றும்' என்றான்.

    கூதிர் வந்து அடைந்த காலை - குளிர் காலம் உடன் வந்து
சேர்ந்த போது; குவவுத் திண் தோள் கொதித்தன - வலிமை வாய்ந்த
திரண்ட (இராவணன்) தோள்கள் முன்னை விட வெப்பம் பூண்டன;
(அப்போது அவன்); சீதமும் சுடுமோ? - கூதிர் காலத்துக் குளிர்ச்சியும்
சுடுவது உண்டோ?; முன்னைச் சிசிரமே இது காண் - பழைய பனிக்
காலம் தான் இது; என்றான் - எனக் கூறினான்; அதற்குப் பணியாளர்;
'ஆதியாய் - (எம்) தலைவனே; அருள் அலது இயற்ற அஞ்சும் அன்றே-
தங்கள்பால் உத்தரவு இல்லாத ஒன்றைச் செய்ய எம்மனோர் அச்சம்
கொள்வரே'; என்ன - என்று தெரிவிக்க; (அது கேட்ட இராவணன்); இங்கு
இருது யாதும் ஆகாது -
இனி இங்கு எவ்வகைப் பருவ காலமும் வருதல்
கூடாது; யாவையும் அகற்றும் என்றான் - எல்லாப் பருவகாலங்களையும்
நீக்கி விடுங்கள்' என ஆணையிட்டான்.

     அனைத்துப் பருவகாலங்களையும் அகன்று போகுமாறு
கட்டளையிட்டான் இராவணன்.                                 102