3170. | கூலத்து ஆர் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க, நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி, எரிந்தது அன்றே- காலத்தால் வருவது ஒன்றோ? காமத்தால் கனலும் வெந் தீ சீலத்தால் அவிப்பது அன்றி, செய்யத்தான் ஆவது உண்டோ? |
கூலத்து ஆர் உலகம் எல்லாம் - கடலால் சூழப்பெற்ற உலகம் முழுவதும்; குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க - குளிர்ச்சியும் வெப்பமும் இல்லாமற் போன நிலையிலும்; நீலத்தார் அரக்கன் மேனி - நீல நிறம் பொருந்திய இராக்கதனாகிய இராவணனின் உடல்; நெய்யின்றி எரிந்தது - எண்ணெயின்றியே எரியலாயிற்று; காலத்தால் வருவது ஒன்றோ? - இவ்வெம்மைக்குக் காலம் (பருவம்) காரணமென்று கூறமுடியுமோ?; காமத்தால் கனலும் வெந்தீ - காமநோயால் எரியும் கொடு நெருப்பை; சீலத்தால் அவிப்பது அன்றி - நல்லொழுக்கத்தால் அணைக்கலாமே அன்றி; செய்யத் தான் ஆவது உண்டோ? - வேறு மாற்று ஏதேனும் செய்தல் இயலுவதோ? (இயலாது). அன்றே - அசை. நெய்யின்றி நெருப்பு எரிந்தது என்றது காரணமின்றியே காரியம் நிகழ்வதாகக் காட்டுவதால் விபாவனை அணி. 104 |