இராவணன் சந்திரனைக் கொணருமாறு கூறுதல்

3171. நாரம் உண்டு எழுந்த மேகம்,
     தாமரை வளையம், நானச்
சாரம் உண்டு இருந்த சீதச் சந்தனம்,
     தளிர், மென் தாதோடு,
ஆரம், உண்டு எரிந்த சிந்தை
     அயர்கின்றான்; அயல் நின்றாரை,
'ஈரம் உண்டு என்பர் ஓடி, இந்துவைக்
     கொணர்மின்' என்றான்.

    நாரம் உண்டு எழுந்த மேகம் - நீரை அருந்தி எழுந்த முகில்களும்;
தாமரை வளையம் - தாமரை மாலைகளும்; நானச் சாரம் உண்டு
இருந்த-
கஸ்தூரியின் சாரம் கலந்திருக்கின்ற; சீதச் சந்தனம் - குளிர்ந்த
சந்தனமும்; தளிர் - தளிர்களும்; மென்தாதோடு - மென்மையான
மகரந்தமும்; ஆரம் - குளிர்ந்த முத்துக்களும்; உண்டு - மேனியில்
பூசப்பெற்றும்; எரிந்த சிந்தை அயர்கின்றான் - வெப்ப மிகுதியால் மனம்
தளர்கின்ற இராவணன்; அயல் நின்றாரை - அருகில் நின்ற பணியாளரை
நோக்கி; 'ஈரம் உண்டு என்பர் - நிலாவுக்குக் குளிர்ச்சி உண்டு
என்கிறார்கள்; ஓடி - நீங்கள் விரைந்தோடி; இந்துவைக் கொணர்மின் -
சந்திரனைக் கொண்டு வாருங்கள்'; என்றான் - எனக் கட்டளையிட்டான்.

     பருவ காலங்கள் அகன்ற பின் குளிர்ந்த பொருள்கள் எவையும்
பயன்படாமல் போகச் சந்திரனைக் கொண்டு வர இராவணன்
உத்தரவிட்டான்.                                              105