3172.வெஞ் சினத்து அரக்கன் ஆண்ட
     வியல் நகர்மீது போதும்
நெஞ்சு இலன், ஒதுங்குகின்ற
     நிறை மதியோனை நேடி,
'அஞ்சலை; வருதி; நின்னை
     அழைத்தனன் அரசன்' என்ன,
சஞ்சலம் துறந்துதான், அச்
     சந்திரன் உதிக்கலுற்றான்.

    வெஞ்சினத்து அரக்கன் - கொடிய சினம் படைத்த இராக்கதனான
இராவணன்; ஆண்ட வியல் நகர் மீது - அரசாளுகின்ற பெரிய இலங்கை
மாநகரின் மேலே; போதும் - போவதற்கு; நெஞ்சு இலன் - மன உறுதி
இல்லாதவனாய்; ஒதுங்குகின்ற - (ஒரு பக்கமாய்) ஓரத்தில் செல்லுகின்ற;
நிறை மதியோனை நேடி - பூரணச் சந்திரனை (ஏவலர்கள்) தேடிக் கண்டு;
'அஞ்சலை வருதி' - அச்சம் நீத்து வருவாயாக; "நின்னை அழைத்தனன்"
அரசன் என்ன -
உன்னை அழைத்து வரும்படி மன்னன் ஏவினான்'
என்று கூற; சஞ்சலம் துறந்து - மனக் கவலை நீத்து; அச் சந்திரன் -
அந்தச் சந்திரன்; தான் உதிக்கலுற்றான் - அவ்விலங்கை மாநகரின் மீது
உதிக்கத் தொடங்கினான்.                                       106