3173. | அயிர் உறக் கலந்த நல் நீர் ஆழிநின்று, ஆழி இந்து- செயிர் உற்ற அரசன், ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில், வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன்-செல்லுமாபோல் உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன், -உதயம் செய்தான். |
செயிர் உற்ற அரசன் - பகைமை பாராட்டிய ஒரு மன்னவன்; ஆண்டு - ஒருக்கால்; ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் - மெலிவு வந்து ஆற்றல் குன்றிய நேரத்தில்; உடைந்து சென்றோர் வலியவன் - முன்னம் அவனிடம் தோல்வி கண்ட ஒரு வல்லவன்; வயிரம் உற்றுச் செல்லுமா போல் - (பழம் பகைக்குப் பழி தீர்க்கப்) பகைமை பாராட்டி மேற் சென்றாற் போல; ஆழி இந்து - சக்கர வட்டம் போன்ற சந்திரன்; அயிர் உறக் கலந்த நல் நீர் - நுண் மணல் சூழ்ந்த நல்ல நீரை உடைய; ஆழி நின்று - கடலிலிருந்து மேலெழுந்து; உயிர் தெற - இராவணன் உயிரை வருத்த; உவந்து வந்தான் ஒத்தனன் - மகிழ்வோடு வந்தவனைப் போல் விளங்கி; உதயம் செய்தான் - புலப்பட்டுத் தோன்றலுற்றான். முன்பு இராவணனிடம் அஞ்சி ஏவல் செய்த சந்திரன், அவன் மீது பழி தீர்க்க வந்தான் போல் உதயம் செய்தான். இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி அமைந்துள்ளது. 107 |