3174. பராவ அருங் கதிர்கள் எங்கும் பரப்பி,
     மீப் படர்ந்து, வானில்
தராதலத்து, எவரும் பேணா,
     அவனையே சலிக்கும் நீரால்,
அரா-அணைத் துயிலும் அண்ணல், காலம்
     ஓர்ந்து, அற்றம் நோக்கி,
இராவணன் உயிர்மேல் உய்த்த திகிரியும்,
     என்னல் ஆன.

    பராவ அருங் கதிர்கள் - போற்றுதற்கரிய (சிறப்புமிக்க)
(அச்சந்திரனின்) கிரணங்களை; எங்கும் பரப்பி - எத்திசையிலும் பரவ
விட்டுக் கொண்டு; மீப் படர்ந்து - மேற் சென்று; வானில் - விண்ணுலகில்;
தராதலத்து - மண்ணுலகில்; எவரும் பேணா அவனையே - எவராலும்
நேசிக்கப்படாத இராவணனையே; சலிக்கும் நீரால் - துன்புறுத்தும்
தன்மையினால்; அரா அணைத் துயிலும் அண்ணல் - ஆதிசேடனாகிய
பாம்புப் படுக்கையில் உறங்கும் திருமால்; காலம் ஓர்ந்து - சமயம் பார்த்து;
அற்றம் நோக்கி - அவன் (இராவணன்) அழிவைக் கருதி; இராவணன்
உயிர்மேல் உய்த்த -
அவ்விராவணன் உயிர் மீது ஏவிய; திகிரியும்
என்னல் ஆன -
சக்கரப்படை என்று சொல்லும்படியாகவும் விளங்கின.

     கடலினின்றும் பொங்கிய நிலா, பாற்கடல் துயிலும் பரமன் ஏவிய
சக்கரமாகக் கற்பித்தல் தன்மைத் தற்குறிப்பேற்ற அணி.              108