3175.அருகுறு பாலின் வேலை அமுது
     எலாம் அளைந்து வாரிப்
பருகின, பரந்து பாய்ந்த நிலாச் சுடர்ப்
     பனி மென் கற்றை,
நெரியுறு புருவச் செங் கண் அரக்கற்கு,
     நெருப்பின் நாப்பண்
உருகிய வெள்ளி அள்ளி வீசினால்
     ஒத்தது அன்றே.

    அருகு உறு பாலின் வேலை - பக்கத்தில் அமைந்துள்ள பாற்
கடலினின்றும்; அமுதெலாம் அளைந்து வாரி - அமுதம் முழுவதையும்
வாரி யெடுத்து; பருகின பரந்து பாய்ந்த நிலாச் சுடர் - குடித்து எங்கும்
விரிந்து பரவிய சந்திரனின் ஒளியான; பனி மென் கற்றை - மெல்லிய
குளிர்ந்த கிரணங்கள்; நெரியுறு புருவச் செங்கண் அரக்கற்கு - இப்போது
நெரிந்த புருவங்களையும் சிவந்த கண்களையும் உடைய இராக்கதனாகிய
இராவணனுக்கு; நெருப்பின் நாப்பண் - நெருப்பின் நடுவே
(வைக்கப்பட்டதால்); உருகிய வெள்ளி - கொதித்த வெள்ளிக் குழம்பை;
அள்ளி வீசினால் ஒத்தது - கைகளால் வாரி வீசினாற் போன்றிருந்தது.
(அன்றே - அசை).

     பாற்கடலில் தோன்றிய சந்திரன் அக்கடலிலிருந்தும் தோன்றிய
அமுதத்தைப் பருகி நிலவொளியாக வெளியிடுவதாகக் கூறுதல்
தற்குறிப்பேற்ற அணி.                                         109