3176. | மின் நிலம் திரிந்தது அன்ன விழுநிலா-மிதிலை சூழ்ந்த செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா, நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை, நாளும் தோலாத் துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் எனச்சுட்டது அன்றே. |
மின் நிலம் திரிந்தது அன்ன - மின்னல் ஒன்று நிலத்தில் உலாவியது போன்ற; விழுநிலா - சிறந்த சந்திர கிரணமானது; மிதிலை சூழ்ந்த - மிதிலை நகரத்தைச் சூழ்ந்த; செந்நெல் அம் கழனி நாடன் - செந்நெல் வயல்களை உடைய விதேக நாட்டு அரசனான சனகனது; திரு மகள் - செல்வ மகளான சீதையின்; செவ்வி - வடிவப் பொலிவை; கேளா - (தங்கை வாயிலாகக்) கேட்டறிந்து; நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை - (அதனால்) தன் இனிய நலம், சிறப்பு ஆகியனவற்றை இழந்து தவிக்கும் இராக்கதனாம் இராவணனை; நாளும் தோலா - எந்நாளும் தோல்வியுறாத; துன்னலன் ஒருவன் - பகைவன் ஒருவன்; பெற்ற - அடைந்த; புகழ் எனச் சுட்டது - புகழாகிய பெருமை மனதைச் சுடுவது போன்று துன்பம் தந்தது. அன்றே - ஈற்றசை. இப்பாடலில் அமைந்திருப்பது உவமையணி. 110 |