3177. | கருங் கழல் காலன் அஞ்சும் காவலன், கறுத்து நோக்கி, 'தரும் கதிர்ச் சீத யாக்கைச் சந்திரன்-தருதிர் என்ன, முருங்கிய கனலின், மூரி விடத்தினை முருக்கும் சீற்றத்து, அருங் கதிர் அருக்கன்தன்னை ஆர் அழைத்தீர்கள்?' என்றான். |
கருங்கழல் காலன் - பெரிய வீரக் கழலை அணிந்த இயமனும்; அஞ்சும் காவலன் - அஞ்சுகின்ற பெருமை படைத்த இராவணன் - கறுத்து நோக்கி - (தன் பணியாளரைச்) சினந்து நோக்கி; சீதம் தரும் கதிர் - குளிர்ச்சியைத் தரும் கிரணங்கள் கொண்ட; யாக்கைச் சந்திரன் - மேனி படைத்த சந்திரனை; தருதிர் என்ன - அழைத்து வாருங்கள் என்று (யான்) கூற; முருங்கிய கனலின் - அழிக்கும் கொடு நெருப்பையும்; மூரி விடத்தினை - வலிமை மிக்க நஞ்சினையும்; முருக்கும் சீற்றத்து - கடும் கோபத்தையும்; அருங்கதிர் அருக்கன் தன்னை - (கொண்ட) வெப்பக் கிரணங்களையும் கொண்ட சூரியனை; 'ஆர் அழைத்தீர்கள்' என்றான் - அழைத்து வந்தது யார் என்று கேட்டான். குளிர் நிலவைக் கடுங்கதிராய் உணர்ந்தான். 111 |