3178. அவ் வழி, சிலதர் அஞ்சி, 'ஆதியாய்!
     அருள் இல்லாரை
இவ் வழித் தருதும் என்பது இயம்பல்
     ஆம் இயல்பிற்று அன்றால்;
செவ் வழிக் கதிரோன் என்றும்
     தேரின்மேல் அன்றி வாரான்;
வெவ் வழித்து எனினும், திங்கள்,
     விமானத்தின் மேலது' என்றார்.

    அவ்வழிச் சிலதர் அஞ்சி - இராவணன் இவ்வாறு வினவிய போது
பணியாளர் அச்சம் கொண்டு; ஆதியாய் - முதல்வனே; அருள் இல்லாரை-
உன்னால் அருளப்பட்டாரையன்றிப் பிறரை; இவ் வழித் தருதும் என்பது-
இங்கு யாம் அழைத்து வருதல் என்பது; இயம்பலாம் இயல்பிற்று
அன்று -
பேசத் தக்க தன்மையது அன்று; செவ்வழிக் கதிரோன் -
சிவந்த கிரணங்கள் உடைய சூரியன்; என்றும் தேரின் மேல் அன்றி
வாரான் -
எப்போதும் தேர் மீதன்றி வரமாட்டான்; வெவ்வழித்து
எனினும் -
(உனக்கு) வெப்பம் தருவதாய் இருப்பினும்; திங்கள் - சந்திரன்;
விமானத்தின் மேலது என்றார் - விமானத்தின் மீதில் உள்ளான் என்றனர்;
ஆல் - அசை.

     கதிரவனும் திங்களும் பயணம் செய்யும் முறைமை எடுத்துக்
காட்டினார்.                                                  112