இராவணன் நிலாவைப் பழித்தல் 3179. | பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு அன்புபட்டார் படும் காமக் குணம்தான் முன்னம் அறியாதான் கொதியாநின்றான்; மதியாலே, தண் அம் தாமரையின் தனிப் பகைஞன் என்னும் தன்மை, ஒருதானே உணர்ந்தான்; உணர்வுற்று, அவன்மேல் இட்டு, உயிர்தந்து உய்க்க உரைசெய்வான்; |
பணம் - பாம்பின் படம்; தாழ் - தோற்கும்படியான; அல்குல் - அல்குலையும்; பனி மொழியார்க்கு - குளிர்ச்சி பொருந்திய பேச்சையும் உடைய பெண்களிடம்; அன்புபட்டார் - ஆசை கொண்டார்; படும் - அடைகின்ற; காமக் குணம் - காதல் நோயின் தன்மையை; தான் முன்னம் அறியாதான் - முன் எப்போதும் துய்த்தறியாத இராவணன்; மதியாலே கொதியா நின்றான் - சந்திரனால் துன்பம் கொண்டவனாகி; தண் அம் தாமரையின் - குளிர்ந்த அழகிய தாமரைக்கு; தனிப் பகைஞன் என்னும் தன்மை - (இந்தச் சந்திரனே) நேரான எதிரி என்னும் உண்மையை; ஒரு தானே உணர்ந்தான் - தனக்குத் தானே உணர்ந்து கொண்டான்; உணர்வுற்று - இவ்வுண்மை உணர்வு வந்து எய்தியதும்; அவன் மேல் இட்டு - அச் சந்திரன் மேல் வைத்து; உயிர் தந்து உய்க்க - தன் உயிரை அளித்துக் காக்குமாறு; உரை செய்வான் - கூறத் தொடங்கினான். இதுகாறும் தான் விரும்பிய மகளிரை அடைதலல்லாது நினைந்து வருந்தும் அனுபவம் இராவணனுக்கு ஏற்படவில்லை என்பதாம். 113 |