3180.'தேயாநின்றாய்; மெய் வெளுத்தாய்;
     உள்ளம் கறுத்தாய்; நிலை திரிந்து
காயா நின்றாய்; ஒரு நீயும்,
     கண்டார் சொல்லக் கேட்டாயோ?
பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார்
     இன்மையால்
ஓயாநின்றேன்; உயிர் காத்தற்கு
     உரியார் யாவர்?-உடுபதியே!

    உடுபதியே - விண்மீன்களின் தலைவனே!; தேயா நின்றாய் - (நீ,
உன்) உடல் தேயப் பெற்றாய்; மெய் வெளுத்தாய் - மேனி
வெண்ணிறமுற்றாய்; உள்ளம் கறுத்தாய் - உள்ளிடத்தே கறுத்தும்
விளங்குகின்றாய்; நிலை திரிந்து காயா நின்றாய் - குளிர்ச்சி நிலை மாறி
வெப்பமும் தருகின்றாய்; ஒரு நீயும் - உயர்ந்தவனாகிய நீயும்; கண்டார்
சொல்லக் கேட்டாயோ -
(என்னைப் போன்றே) சீதையின் அழகைக்
கண்டவர்கள் வருணிக்கக் கேட்டனையோ? பாயா நின்ற மலர் வாளி -
(என் உடல் மீது) பாய்கின்ற மன்மதனின் மலர்க் கணைகள்; பறியா
நின்றார் இன்மையால் -
பறித்து என்னைப் பாதுகாப்பார்
இல்லாமையினால்; ஓயா நின்றேன் - தளர்வுற்று நின்றேன்; உயிர்
காத்தற்கு -
என் (தவிக்கும்) உயிரைக் காப்பாற்ற; உரியார் யாவர் -
உரியவர் தான் யார் உள்ளார்? (எவரும் இலர்).

     எனது துயரைத் தணிக்க உன்னை அழைத்தால் நீயே துயர்
மிக்கவனாய் உள்ளாய் என்பது கருத்து. உள்ளம் கறுத்தாய் - சிலேடை.
விண்மீன்கள் சந்திரனின் மனைவியர் என்னும் புராணக் கருத்தால் உடுபதி
என்றார்.                                                    114