3187. | அணைமலர்ச் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர், பணைகளைத் தழுவிய பவள வல்லிபோல், இணை மலர்க் கைகளின் இறுக, இன் உயிர்த் துணைவரைத் தழுவினர், துயில்கின்றார் சிலர். |
சிலர் - மேலும் சில அரக்க மகளிர்; அணைமலர்ச் சேக்கையுள் - பஞ்சு மெத்தை மேல் மலர் தூவிய படுக்கையில்; ஆடல் தீர்ந்தனர் - கலவி முற்றியவராய்; பணைகளைத் தழுவிய - பருத்த மரங்களைப் பின்னிய; பவளவல்லி போல் - பவளக் கொடிகளைப் போல; இன் உயிர்த் துணைவரை - இனிய உயிரனைய கணவர்களை; இணை மலர்க் கைகளின் - மலர் போன்ற இரண்டு கரங்களாலும்; இறுகத் தழுவினர் - அழுத்தமாக அணைத்தவாறு; துயில்கின்றார் - உறங்கினர். உயிர்த் துணைவர் - உவமத் தொகை (உயிர் போன்ற துணைவர்). ஆடவரின் திண்மைக்கு மரங்களும், பெண்டிரின் எழிலுக்கும் மென்மைக்கும் பவளக் கொடிகளும் பொருந்திய உவமைகளாயின. 121 |