3190. | புனைந்து இதழ் உரிஞ்சுறு பொழுது புல்லியும், வனைந்தில, வைகறை மலரும் மா மலர்; நனந் தலை அமளியில் துயிலும் நங்கைமார் அனந்தரின் நெடுங் கணோடு ஒத்த ஆம்அரோ. |
வைகறை மலரும் மாமலர் - விடியற் காலையில் மலர வேண்டிய தாமரை போன்ற சிறந்த மலர்கள்; புனைந்து இதழ் உரிஞ்சுறு பொழுது - (அழகியதாய்க்) கோலம் கொள்ளும் இதழ்கள் மலரும் உதயகாலம்; புல்லியும் - நெருங்கிய பின்னும்; வனைந்தில - மலரும் பாங்கு கொள்ள வில்லை; நனந்தலை அமளியில் - இடம் அகன்ற படுக்கையில்; துயிலும் நங்கைமார் - உறக்கம் கொள்ளுகின்ற அரக்க மகளிரின்; அனந்தரின் நெடுங்கணோடு - தூக்க வசப்பட்ட நெடிய கண்களோடு; ஒத்த ஆம் - ஒத்திருந்தன. (அரோ - அசை). காரணம் தோன்றிக் காரியம் நிகழாமை கூறுதலால் விபாவனை அணி என்பர். முன் பாடலும் இவ்வாறு அமைந்தது. அனந்தர் - தூக்கக் கலக்கம். 124 |