3190.புனைந்து இதழ் உரிஞ்சுறு
     பொழுது புல்லியும்,
வனைந்தில, வைகறை
     மலரும் மா மலர்;
நனந் தலை அமளியில்
     துயிலும் நங்கைமார்
அனந்தரின் நெடுங் கணோடு
     ஒத்த ஆம்அரோ.

    வைகறை மலரும் மாமலர் - விடியற் காலையில் மலர வேண்டிய
தாமரை போன்ற சிறந்த மலர்கள்; புனைந்து இதழ் உரிஞ்சுறு பொழுது -
(அழகியதாய்க்) கோலம் கொள்ளும் இதழ்கள் மலரும் உதயகாலம்;
புல்லியும் - நெருங்கிய பின்னும்; வனைந்தில - மலரும் பாங்கு கொள்ள
வில்லை; நனந்தலை அமளியில் - இடம் அகன்ற படுக்கையில்; துயிலும்
நங்கைமார் -
உறக்கம் கொள்ளுகின்ற அரக்க மகளிரின்; அனந்தரின்
நெடுங்கணோடு -
தூக்க வசப்பட்ட நெடிய கண்களோடு; ஒத்த ஆம் -
ஒத்திருந்தன. (அரோ - அசை).

     காரணம் தோன்றிக் காரியம் நிகழாமை கூறுதலால் விபாவனை அணி
என்பர். முன் பாடலும் இவ்வாறு அமைந்தது. அனந்தர் - தூக்கக் கலக்கம்.
                                                          124