3191. இச்சையில் துயில்பவர்
     யாவர் கண்களும்,
நிச்சயம், பகலும் தம்
     இமைகள் நீக்கல-
'பிச்சையும் இடுதும்' என்று,
     உணர்வு பேணலா
வச்சையர் நெடு மனை
     வாயில் மானவே.

     இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும் - (அந்நகரத்தில்)
விருப்பம் போல் தூங்குவோர் அனைவருடைய கண்களும்; பகலும் தம்
இமைகள் நீக்கல -
பகல் வந்த பின்னும் இமை விரியாதிருந்தன; நிச்சயம்-
இது சத்தியம்; (இக்கண்கள்); 'பிச்சையும் இடுதும் - கேட்போருக்குப்
பிச்சை இடுவோம்; என்று உணர்வு பேணலா - என்னும் எண்ணம்
இல்லாத; வச்சையர் - உலோபிகளின்; நெடுமனை வாயில்மான -
உயர்ந்த இல்லங்களின் வாசற்கதவு போன்றிருந்தன. (அடைந்திருந்தன); ஏ -
ஈற்றசை.

     நெடுமனை வாயில் என்பதால் மனையின் வளம் தெரிகிறது. வளம்
இருந்தாலும் பிச்சையேனும் இடுவோம் என்று நினையும் மனம் இல்லை.
பெரிய கண்கள், பொழுதும் விடிந்தது; காண்பன காணும் எண்ணம் இல்லை.
வாயிலைத் திறந்தால் எவரேனும் வந்து விடுவரோ என்று கருதி அடைத்த
வாசல் என்பது குறிப்பு. உவமையணி, விருந்தினரையும் தக்கோரையும் தேடி
வழங்கும் வள்ளன்மைதான் இல்லை; தேடி வரும் இரவலர்க்குப்
பிச்சையேனும் இடலாமே என்ற எண்ணம் இல்லை என்பதைப் பிச்சையும்
என்ற இழிவு சிறப்பும்மை புலப்படுத்திற்று.                        125