3191. | இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும், நிச்சயம், பகலும் தம் இமைகள் நீக்கல- 'பிச்சையும் இடுதும்' என்று, உணர்வு பேணலா வச்சையர் நெடு மனை வாயில் மானவே. |
இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும் - (அந்நகரத்தில்) விருப்பம் போல் தூங்குவோர் அனைவருடைய கண்களும்; பகலும் தம் இமைகள் நீக்கல - பகல் வந்த பின்னும் இமை விரியாதிருந்தன; நிச்சயம்- இது சத்தியம்; (இக்கண்கள்); 'பிச்சையும் இடுதும் - கேட்போருக்குப் பிச்சை இடுவோம்; என்று உணர்வு பேணலா - என்னும் எண்ணம் இல்லாத; வச்சையர் - உலோபிகளின்; நெடுமனை வாயில்மான - உயர்ந்த இல்லங்களின் வாசற்கதவு போன்றிருந்தன. (அடைந்திருந்தன); ஏ - ஈற்றசை. நெடுமனை வாயில் என்பதால் மனையின் வளம் தெரிகிறது. வளம் இருந்தாலும் பிச்சையேனும் இடுவோம் என்று நினையும் மனம் இல்லை. பெரிய கண்கள், பொழுதும் விடிந்தது; காண்பன காணும் எண்ணம் இல்லை. வாயிலைத் திறந்தால் எவரேனும் வந்து விடுவரோ என்று கருதி அடைத்த வாசல் என்பது குறிப்பு. உவமையணி, விருந்தினரையும் தக்கோரையும் தேடி வழங்கும் வள்ளன்மைதான் இல்லை; தேடி வரும் இரவலர்க்குப் பிச்சையேனும் இடலாமே என்ற எண்ணம் இல்லை என்பதைப் பிச்சையும் என்ற இழிவு சிறப்பும்மை புலப்படுத்திற்று. 125 |