3192. நஞ்சு உறு பிரிவின,
     நாளின் நீளம் ஓர்
தஞ்சு உற விடுவது ஓர்
     தயாவு தாங்கலால்,
வெஞ் சிறை நீங்கிய
     வினையினார் என,
நெஞ்சு உறக் களித்தன-
     நேமிப்புள் எலாம்.

    நாளின் நீளம் - பகல் நேரம் நீளுதலால்; ஓர் தஞ்சு உற - அதுவே
தஞ்சமாக அமைய; நஞ்சுறு பிரிவின - கொடிய விடம் போலும் பிரிவுத்
துன்பத்தினைப் பெற்றனவாய் விளங்கிய; நேமிப்புள் எலாம் - சக்கரவாகப்
பறவைகளெல்லாம்; விடுவது ஓர் தயாவு தாங்கலால் - அத்துன்பம்
நீங்கும் பகற் பொழுதின் கருணையினால்; வெஞ்சிறை நீங்கிய -
பிறவியாகிய கொடிய சிறையினின்றும் விடுபட்ட; வினையினார் என - நல்
வினையாளர் போல; நெஞ்சு உறக் களித்தன - மனம் நிறைந்து
மகிழ்ந்தன.

     இரவில் பிரிவுத் துன்பமுறும் சக்கரவாகப் புட்கள் பகலில் கூடி
மகிழ்ந்தன. பிரிவு நஞ்சென உவமிக்கப் பெற்றது. நீளம் - கூடு எனவும்
பொருள் கொள்ளலாம். தயாவு : தயா, தயவு, கருணை.              126