3193. நாள்மதிக்கு அல்லது,
     நடுவண் எய்திய
ஆணையின் திறக்கலா
     அலரில் பாய்வன,
மாண் வினைப் பயன்படா
     மாந்தர் வாயில் சேர்
பாணரின் தளர்ந்தன-
     பாடல்-தும்பியே.

    நாள் மதிக்கு அல்லது - ஒவ்வொரு நாளும் உதிக்கும் நிலாவுக்கு
அன்றி; நடுவண் எய்திய ஆணையின் - இடையில் வந்து சேரும்
(பகலவனின்) கட்டளைக்கு; திறக்கலா - மலராத; அலரில் பாய்வன -
குவளை போன்ற மலர்களில் பாய்வனவான; பாடல் தும்பி - இசை பாடும்
வண்டுகள் (அவை குவிந்துள்ள நிலையில்); மாண்வினைப் பயன்படா -
மாட்சி மிக்க கலைத் தொழிலைப் பயன் கொள்ளாத; மாந்தர் வாயில்
சேர்-
மனிதர்களின் வீட்டு வாசலை அடைந்து; பாணரின் தளர்ந்தன -
(பயன்பெறாத) பாணர்களைப் போல் சோர்வுற்றன; ஏ - ஈற்றசை.

     பகற் பொழுதில் குவிந்த மலர்களில் பாய்ந்த வண்டுகள்
கலைநயமுணராதார் முன் சென்ற பாணர் போன்று சோர்வுற்றன.     127