3194. | அரு மணிச் சாளரம் அதனினூடு புக்கு எரி கதிர் இன் துயில் எழுப்ப எய்தவும், மருளொடு தெருளுறும் நிலையர், மங்கையர்- தெருளுற மெய்ப் பொருள் தெரிந்திலாரினே. |
அரு மணிச் சாளரம் - அரிய மாணிக்கங்கள் பதித்த சன்னலில்; அதனின் ஊடு புக்கு - அங்கே உட்புகுந்து வந்து; எரிகதிர் - வெப்பம் மிக்க சூரியன்; இன்துயில் எழுப்ப எய்தவும் - தங்கள் இனிய உறக்கத்திலிருந்து தட்டியெழுப்ப வந்து சேர்ந்த பின்னும்; மங்கையர் - அரக்கர் குலப் பெண்கள்; தெருள் உற மெய்ப் பொருள் தெரிந்திலாரின் - தெளிவு தரும்படி உயர்ந்த உண்மைப் பொருளை அறியாத பேதையர் போன்று; மருளொடு - மயக்கமும்; தெருளுறும் நிலையர் - தெளிவும் கலந்த குழப்ப நிலையினராக விளங்கினர்; ஏ - ஈற்றசை. இரவு சென்றதை நம்பமுடியாத நிலையால் ஏற்பட்ட குழப்பம், ஞானமில்லாதார் உலக வாழ்வின் உண்மையறியாத குழப்பத்தோடு ஒப்பிடப்படுகின்றது. 128 |