3194.அரு மணிச் சாளரம்
     அதனினூடு புக்கு
எரி கதிர் இன் துயில்
     எழுப்ப எய்தவும்,
மருளொடு தெருளுறும்
     நிலையர், மங்கையர்-
தெருளுற மெய்ப்
     பொருள் தெரிந்திலாரினே.

    அரு மணிச் சாளரம் - அரிய மாணிக்கங்கள் பதித்த சன்னலில்;
அதனின் ஊடு புக்கு - அங்கே உட்புகுந்து வந்து; எரிகதிர் - வெப்பம்
மிக்க சூரியன்; இன்துயில் எழுப்ப எய்தவும் - தங்கள் இனிய
உறக்கத்திலிருந்து தட்டியெழுப்ப வந்து சேர்ந்த பின்னும்; மங்கையர் -
அரக்கர் குலப் பெண்கள்; தெருள் உற மெய்ப் பொருள் தெரிந்திலாரின்
-
தெளிவு தரும்படி உயர்ந்த உண்மைப் பொருளை அறியாத பேதையர்
போன்று; மருளொடு - மயக்கமும்; தெருளுறும் நிலையர் - தெளிவும்
கலந்த குழப்ப நிலையினராக விளங்கினர்; ஏ - ஈற்றசை.

     இரவு சென்றதை நம்பமுடியாத நிலையால் ஏற்பட்ட குழப்பம்,
ஞானமில்லாதார் உலக வாழ்வின் உண்மையறியாத குழப்பத்தோடு
ஒப்பிடப்படுகின்றது.                                           128