3195. ஏவலின் வன்மையை
     எண்ணல் தேற்றலர்,
நாவலர் இயற்றிய நாழி
     நாம நூல்
காவலின் நுனித்து உணர்
    கணிக மாக்களும்,
கூவுறு கோழியும்,
     துயில்வு கொண்டவே.

    நாவலர் இயற்றிய - புலமை நலம் சான்றோர் உருவாக்கிய; நாழி
நாம நூல் -
காலக் கணிதமான சோதிட நூல்களை; காவலின் நுனித்து
உணர் கணித மாக்களும் -
பாதுகாத்து ஆராய்ந்து உணர்ந்த சோதிட
வல்லுநர்களும்; கூவுறு கோழியும் - விடியலைக் கூவி உணர்த்தும்
சேவல்களும்; ஏவலின் வன்மையை - (இரவை விலக்கிப் பகலை வரச்
சொன்ன) இராவணனின் ஆணையின் வல்லமையை; எண்ணல் தேற்றலர் -
உணரும் ஆற்றல் இல்லாதவராய்; துயில்வு கொண்ட - உறக்கத்தில்
ஆழ்ந்திருந்தனர். (ஏ - அசை).

     இராவணன் ஆணையின் கடுமையால் காலக் கணிதமும் தோற்றது.
இயற்கையை உணர்ந்த சேவல்களும் தோற்றன.

     எழுவாய்க்கு ஏற்றபடி அஃறிணை முடிவு உயர்திணையாகப் பொருள்
முடிவு பெற்றது.                                              129