3196. | இனையன உலகினில் நிகழும் எல்லையில், கனை கழல் அரக்கனும், கண்ணின் நோக்கினான்; 'நினைவுறு மனத்தையும் நெருப்பின் தீய்க்குமால்; அனைய அத் திங்களே ஆகுமால்' என்றான். |
இனையன - இத்தகைய நிகழ்ச்சிகள்; உலகினில் நிகழும் எல்லையில் - உலகெங்கும் நடைபெற்ற பொழுதில்; கனை கழல் அரக்கனும் - ஒலிக்கும் வீரக்கழல் புனைந்த இராவணனும்; கண்ணின் நோக்கினான் - கண்களால் சூரியனைக் கண்டு; நினைவுறு மனத்தையும்- எண்ணும் இதயத்தையும்; நெருப்பின் தீய்க்குமால் - இச் சூரியன் தீயாய்ச் சுட்டெரிக்கின்றான்; ஆதலால்; அனைய அத்திங்களே ஆகும் - இவனும் அச் சந்திரன் போன்றே இருக்கிறான்'; என்றான் - என்று மொழிந்தான். (ஆல் - அசை). 130 |